டீ விற்ற மோடிதான் காங். வாரிசு அரசியலை தகர்க்கப் போகிறார்.. அய்யருக்கு பாஜக பதிலடி

நரேந்திர மோடியால் பிரதமராக முடியாது. அவர் டீ விற்கத்தான் லாயக்கு. வேண்டுமானால் அவருக்கு காங்கிரஸ் கூட்ட வளாகத்தில் கடை போட்டுத் தரத் தயார். அவர் அங்கு வந்து டீ விற்கட்டும் என்று மணிசங்கர அய்யர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அய்யரின் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், ஒரு சாதாரண முன்னாள் டீ விற்பனையாளர், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி, அதைத் தரை மட்டமாக்கி, பிரதமர் பதவியை அடைந்து, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தி நிரூபிக்கும் நாள் நெருங்கி விட்டது.
2014 தேர்தலில் இதுதான் போராட்டக்களமாக மாறப் போகிறது. அதை சந்திக்க நாங்கள் தயார். அவர்களும் தயாராக இருக்கட்டும் என்றார் அவர்.
ஆனால் தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று அய்யர் கூறியுள்ளார். இதுகுறித்து அய்யர் கருத்து தெரிவிக்கையில், நான் அரசியலில் இருக்கிறேன். இது வீட்டின் ஓய்வறை அல்ல, இது பாக்ஸிங் அறை. உங்களால் சூட்டைத் தாங்க முடியாவிட்டால் வெளியேறுங்கள்.
21வது நூற்றாண்டில் மோடியால் பிரதமர் பதவிக்கு வரவே முடியாது. அவர் வருவதாக இருந்தால் டீ விற்க வரட்டும். இங்கு அவருக்கு அறை ஒதுக்கித் தர நாங்கள் தயார்.
அவர்தான் தன்னைத் தானே டீ விற்பவர் என்று சொல்லத் தொடங்கினார். அதன் அடிப்படையில்தான் நாங்களும் பேசி வருகிறோம். டீ விற்பதுதான் அவரது அடிப்படைத் தகுதி என்றால் இந்த மாநாட்டிலேயே அவருக்கு ஒரு ஸ்டால் போட்டுத் தருகிறோம். அவர் வந்து டீ விற்கட்டும் என்றுதான் நான் சொன்னேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார் அய்யர்.












Click it and Unblock the Notifications