மேற்கு வங்க 'இடதுசாரி அரசின் கடைசி முதல்வர்' புத்தேவ் பட்டாச்சார்யா காலமானார்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான (கம்யூனிஸ்ட்) புத்ததேவ் பட்டாச்சார்யா தமது 80 வயதில் மூப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பால் காலமானார். மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரி அரசின் முதல்வராக ஜோதிபாசுக்குப் பின்னர் பதவியேற்றவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்க முதல்வராக 10 ஆண்டுகள் பதவியில் இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யாதான், அம்மாநிலத்தில் இடதுசாரிகள் அரசின் கடைசி முதல்வர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1977-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி) ஆட்சி செய்தனர். 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள்தான் தொடர்ச்சியாக வென்று கோட்டையாக வைத்திருந்தனர். 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு.

ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 2 முறை முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இடதுசாரிகள் எந்த மேற்கு வங்கத்தை கோட்டைபோல கட்டி ஆண்டனரோ இன்று அந்த சுவடு கூட இல்லாமல் நிற்கின்றனர்.. ஆம் 2011-ம் ஆண்டு முதல் இடதுசாரிகளை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை நிலை நிறுத்தி இருக்கிறார் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசின் - மார்க்சிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
இடதுசாரி அரசியல் ஆளுமையாக திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மிகச் சிறநத கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக இலக்கிய ஆளுமையாகம் ஜொலித்தவர். தற்போது 80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு கொல்கத்தா இல்லத்தில் இந்த மண்ணில் இருந்து பிரியா விடைபெற்றார் புத்ததேவ் பட்டாச்சார்யா.
புத்ததேவ் பட்டாச்சார்யா என்கிற முதுபெரும் தலைவருக்கு செவ்வணக்கங்களையும் வீரவணக்கங்களையும் "இடதுசாரிகள்" மட்டுமின்றி அனைத்து சமூக ஆர்வலர்களும் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications