சபரிமலை.. 4 ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு பச்சைக்கொடி.. பெண் நீதிபதி எதிர்ப்பு!
Recommended Video
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை இல்லை என்று நான்கு ஆண் நீதிபதிகள் கூறிய நிலையில் ஒரு பெண் நீதிபதி மட்டும் அதற்கு மாறாக தீர்ப்பளித்துள்ளார். இது பெண்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் வழக்கின் முக்கிய அம்சம். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
[இனி குடும்பத்தோடு ஐயப்பன் கோயிலுக்கு போவோம்.. தமிழக பெண்கள் இனிப்பு கொடுத்து தீர்ப்புக்கு வரவேற்பு]
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், ரோஹின்டன் நாரிமன், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் தீர்ப்பை அளித்தனர். இதில் இந்து மல்ஹோத்ராவைத் தவிர மற்ற அனைவரும், அதாவது நான்கு ஆண் நீதிபதிகளும் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
முரண்பட்ட பெண் நீதிபதி
அதேசமயம், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய உள்ள தடை நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தபோது, பெண் நீதிபதி மாறாக தீர்ப்பளித்தது சுவாரஸ்யமான விஷயம். நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்த தீர்ப்பின் விவரம்:
மாற்றக் கூடாது
அனைத்து மதங்கள் குறித்த தீவிர கருத்துக்களை இந்த பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற சூழலைக் காப்பதற்காக, காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் வழக்கங்களை மாற்றுவது சரியாக இருக்காது. அது பிரச்சினையை மேலும் அதிகரிக்கவே உதவும்.
இவர்களைப் போலவே அவர்களுக்கும்
சமத்துவத்துக்கான உரிமை என்று சிலர் கூறும்போது, மத பழக்கங்களுக்கான உரிமை என்றும் சிலர் கூற முடியும். அதுவும் கூட அடிப்படை உரிமைதான். சபரிமலை கோவிலுக்குள் பெண்களை முழுமையாக அனுமதிக்கக் கூடாது என்பதே எனது தீர்ப்பு.
கோர்ட் தலையிட முடியாது
இந்தியாவில் பல்வேறு வகையான மத பழக்க வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த நம்பிக்கையின்படி வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதில் சட்டம் தலையிட முடியாது. தலையிட்டு தீர்வு கூற முடியாது. தலையிட்டு எதையும் மாற்றவும் கூடாது. அதில் பாரபட்சமே காணப்பட்டாலும் கூட அதில் சட்டம் தலையிட முடியாது என்பது எனது கருத்து.
தேவையில்லை மாற்றம்
சபரிமலைக்கு என்று மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள மத பழக்க வழக்கங்களில், ஆழமான மத நம்பிக்கைகளில் மாற்றம் கொண்டு வரத் தேவையில்லை என்பதே எனது கருத்தாகும் என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
ஆச்சரியத்தில் பெண்கள்
ஆண்கள் அனைவரும் ஒரே மனதாக பெண்கள் வழிபடலாம், கோவிலுக்குச் செல்லலாம் என்று ஆணித்தரமாக தீர்ப்பளித்து வரலாறு படைத்து விட்ட நிலையில் பெண் நீதிபதி, பெண்களுக்குத் தடை தொடர வேண்டும், அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்திருப்பது பெண்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.