இனி குடும்பத்தோடு ஐயப்பன் கோயிலுக்கு போவோம்.. தமிழக பெண்கள் இனிப்பு கொடுத்து தீர்ப்புக்கு வரவேற்பு
Recommended Video

சேலம்: சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் ஐயப்பன் கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக பெண்கள் வரவேற்றுள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதில் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா தவிர மற்ற நான்கு நீதிபதிகளும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழக பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்.
இது குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்பால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் கருவறைக்குள்ளேயே பெண்கள் சென்று அம்மனுக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறார்கள். இயல்பிலேயே பக்தி உணர்வு மிக்கவர்கள் பெண்கள்.
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி!]
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்போம். கடவுள் வழிபாட்டை நாங்கள் தான் அதிகம் மேற்கொள்வோம். எனது சிறுவயதில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும் என்ற ஆசை உண்டு.
எங்களுக்கு இருந்த இந்த விருப்பத்தை உச்சநீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது. கணவரும், குழந்தைகளும் மட்டும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது எங்களால் போக முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இப்போது குடும்பத்தோடு, கோவிலுக்கு செல்லலாம் என்று எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, திருப்தியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications