மகாராஷ்டிராவில் பெண் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த ஃபேப்இந்தியா உழியர்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ஃபேப்இந்தியா கடையில் பெண் ஒருவர் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவாவின் கன்டோலிம் நகரில் இருக்கும் ஃபேப்இந்தியா கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டுபிடித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள தாராபாய் பார்க்கில் இருக்கும் ஃபேப்இந்தியா கடைக்கு பெண் ஒருவர் தனது கணவருடன் கடந்த 31ம் தேதி சென்றுள்ளார். உடை வாங்கிய அவர் அதை போட்டுப் பார்க்க பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் பணிபுரியும் பிரகாஷ் ஏ. இஸ்புர்லே தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து அந்த பெண் உடை மாற்றிய அறையின் கதவுக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக உள்ளே போட்டுள்ளார்.
இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கடை ஊழியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பிரகாஷ் அந்த போனை எடுத்து பதிவானவற்றை அழித்துவிட்டார். அவர் இவ்வளவு செய்தும் கடை ஊழியர்கள் அவரை தடுக்கவில்லை யாம்.
இதையடுத்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை ஆய்வு செய்தனர். அதில் பிரகாஷ் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் செல்போனை நைசாக போட்டது பதிவாகியிருந்தது. உடனே போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications