இந்தியாவின் புதிய ஏவுகணை நிர்பய் வெற்றிகரமாக ஏவப்பட்டது - 800 முதல் 1000 கி.மீ தூரம் வரை பாயும்!
- டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன்
சந்திப்பூர், ஒடிஷா: நிர்பய் என்ற, முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா இன்று இரண்டாவது முறையாக இந்தியா பரிசோதித்துப் பார்த்தது.
முதல் முயற்சி பாதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள சந்திப்பூரில் உள்ள ஏவுகணை மையத்தில் இந்த பரிசோதனை நடைபெற்றது. இது நிர்பய் ஏவுகணையின் 2வது பரிசோதனையாகும். முதல் முயற்சி 2013ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நடந்தது. ஆனால் ஏவுகணை பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
800 முதல் 1000 கிலோமீட்டர் வரையிலான இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமையுடன் நிர்பய் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை முழுமையாக பெங்களூரிலேயே தயாரித்துள்ளனர். வழக்கமாக இந்திய ஏவுகணைகள் ஹைதராபாத் டிஆர்டிஓ பிரிவுகளில் தான் தயாரிக்கப்படும். ஆனால், நிர்பய் ஏவுகணை முழுமையாக பெங்களூரிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ பிரிவான பெங்களூர் ஏரோநாட்டிக்கல் வளர்ச்சிக் கழகத்தில் (ஏடிஇ) தான் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. ஏற்கனவே லக்ஷ்யா, நிஷாந்த், ரஸ்தம் ஆகிய ஏவுகணை தயாரிப்பில் பெங்களூர் ஏடிஇ மையம் முக்கியப் பங்கு வகித்த அனுபவம் இருப்பதால் நிர்பய் ஏவுகணையை முழுமையாக இங்கேயே வடிவமைக்க டிஆர்டிஓ முடிவு செய்தது.
நிர்பயாவின் முதல் முயிற்சி கைவிடப்பட்டது தொடர்பாக இன்னொரு மூத்த விஞ்ஞானி கூறுகையில், முதல் முயற்சியின்போது "டேட்டா"வில் சில தவறுகள் ஏற்பட்டன. அதாவது 500 முதல் 600 மில்லி செகன்ட் வரை தவறு ஏற்பட்டது. இன்றைய முயற்சியின்போது நாங்கள் நன்கு பரிசோதிக்கப்பட்ட இனெர்ஷியல் நேவிகேஷன் முறையை (Inertial Navigation System (INS)) பயன்படுத்தவுள்ளோம் என்று கூறியிருந்தார்.
டிஆர்டிஓ அமைப்பின் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் பிரிவு இயக்குநர் ஜெனரல் டாக்டர் கே.தமிழ்மணி இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் பேசுகையில், நிர்பய் ஏவுகணையின் வெற்றியைத் தொடர்ந்து, இதை விட அதி நவீனமான ஏவுகணைத் திட்டத்தில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தவுள்ளனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிர்பய் ஏவுகணை எடைக் குறைவானது, நவீனமானது எதிர்காலத்தில் இந்தியாவின் ஸ்மார்ட்டான ஆயுதமாக நிர்பய் விளங்கும் என்றார்.
அமெரிக்காவின் டோமஹாக் வகை ஏவுகணைகளுக்கு நிகரானது இந்தியாவின் நிர்பய் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா - ஒரு டைரிக் குறிப்பு
பெயர் - நிர்பய் (தமிழில் சொன்னால் 'அஞ்சான்')
வகை- 2 ஸ்டேஜ் சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணை
எல்லை - 800 முதல் 1000 கிலோமீட்டர்
நீளம் - 6 மீட்டர்
விட்டம் - 0.52 மீட்டர்.
விங் ஸ்பேன்- 2.7 மீட்டர்
எடை - தோராயமாக 1500 கிலோகிராம்
வேகம் - 0.7 mach
திறன் - பன்னோக்கு தாக்குதல் பலம்.
செலவுத் தொகை - ஒரு ஏவுகணைக்கு ரூ. 10 கோடி.
உருவாக்கம் - ஏடிஇ, பெங்களூர்