ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் கட்காரி
நாக்பூர்: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நேற்று சென்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பார்க்க கட்காரி வெள்ளை நிற ஸ்கூட்டரில் சென்றார். அவர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குள் நுழைந்தபோது இப்படி ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறியுள்ளீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். ஸ்கூட்டரில் அவரின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,
தலைவர்கள் மற்றும் கட்சியினரின் அணுகுமுறையை இது காட்டுகிறது. இது சின்ன விஷயம் தான். ஆனால் மத்திய போக்குவரத்து துறை அமைச்சரே விதிகளை மீறியுள்ளார். சட்டத்தை அமல்படுத்த வேண்டியவரே மீறியுள்ளார் என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் கட்காரி ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டர் ஓட்டியது கேமராவில் பதிவானது என்று செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.