தமிழக விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்க இடைக்காலத் தடை
டெல்லி: தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் கெயில் (இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம்) எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ. 3,400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இத் திட்டத்தின்படி, தமிழகத்தின் விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். ஆனால், இதனால், சுற்றுச்சூழலுக்கும், வேளாண் வளத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தமிழக அரசிடம் முறையிட்டனர்.
அதைத் தொடர்ந்து, அத் திட்டத்தை தமிழக பகுதிகளில் செயல்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து கெயில் நிறுவனம் முறையிட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விதித்த தடை உத்தரவை கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்தது.
இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் சில விவசாயிகள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை தலைமை நீதிபதி பி. சதாசிவம், ரஞ்சன் கோகோய், எம்.ஒய். இக்பால் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கெயில் திட்டத்தை தமிழக அரசு தடை விதித்த பிறகு அதை எதிர்த்து அந் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல், திட்டம் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த குழாய் மூலம் எரிவாயு பதிக்கும் திட்டம் தொடர்பாக விவசாய அமைப்புகளும் தமிழக அரசும் தேவையற்ற அச்சத்தைக் கொண்டுள்ளன என்றார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டத்தின்படி நெடுஞ்சாலைப் பகுதியில் குழாய் பதித்தால் பிரச்னை இல்லை. ஆனால், விவசாயிகளின் நிலத்தில் அதைப் பதிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழக அரசு மனுவுக்கு பதில் அளிக்க கெயில் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த மனு மீதான அடுத்த விசாரணை பிப்ரவரி 17-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, திட்டத்துக்கு தடை விதித்த தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.