ஜாட் போராட்டத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் புகார்... 7 பேர் மீது வழக்குப்பதிவு
சண்டிகர்: ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் ஒருவர் முர்தால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து 50 கி.மீ தொலைவில் முர்தால் என்ற பகுதியில், பெண்கள் பலர் போராட்டத்தின் நடுவே பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்பட்டது.

லாரி டிரைவர் ஒருவர், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சுமார் 50 பெண்களை போராட்டக்காரர்கள், வயல் வெளிக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கார்களில் பயணித்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ளாடைகள் சிதறிக்கிடந்தன' என்றார்.
லாரி டிரைவரின் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் கூறிவந்தனர்.
இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை அம்மாநில காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உள்ளாடைகளை கைப்பற்றி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 7 பேர் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்ததாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications