அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் 23000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.. பாஜக அபார வெற்றி!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் (JORHAT) சட்டமன்றத் தொகுதியில் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் தேர்தல் முடிவு தெளிவாகியது. காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தோல்வியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி 69,439 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், கௌரவ் கோகோய் 46,257 வாக்குகளுடன் தோற்றார். சுமார் 23,182 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தருண் கோகோயின் மகன் தோல்வி
முன்னாள் அசாம் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனான கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட்டார். இது அவரது முதல் சட்டமன்றத் தேர்தல். இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதே ஜோர்ஹாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாஜகவின் தோபன் குமார் கோகோயை 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி.யாக வெற்றி பெற்றிருந்தார்.
பாஜக வேட்பாளர் ஹிதேந்திர நாத் வெற்றி
பாஜக சார்பில் போட்டியிட்ட ஹிதேந்திர நாத் கோஸ்வாமி ஜோர்ஹாட் தொகுதியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். முன்பு அசோம் கண பரிஷத் (ஏஜிபி) சார்பில் மூன்று முறையும், பாஜக சார்பில் இரண்டு முறையும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் இவர். இந்த முறை வெற்றிப்பெற்றது மூலம் பிஜேபி சார்பில் மூன்றாவது வெற்றியாகும். ஏஜிபி தற்போது பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கௌரவ் கோகோய் பிசிஐக்கு அளித்த பேட்டியில், "அசாம் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் எங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடியவில்லை. எல்லா தொகுதிகளிலும் நம் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.
பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைவரும் தொடர்ந்து இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இறுதி முடிவுகள் வெளியான பிறகு கட்சியின் உயர்மட்டத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதோடு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கௌரவ் கோகோய் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். பாஜக, உள்ளிட்ட அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவரை "பாகிஸ்தான் ஏஜெண்ட்" என்று விமர்சித்தனர். அவரது பாகிஸ்தான் பயணம், வெளிநாட்டுப் பாஸ்போர்ட், சொத்துகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஒரு AI வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு முதலமைச்சர் சர்மா கௌரவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது 500 கோடி ரூபாய் அவதூறு வழக்கும் தொடுத்திருந்தார்.
கௌரவ் கோகோய் டெல்லியில் படித்து, பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவரது தந்தை தருண் கோகோய் ஜோர்ஹாட்டில் இருந்தே அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications