ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: கொல்கத்தாவில் முக்கிய குற்றவாளி கைது
கொல்கத்தா: புனேயில் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான்.
கொல்கத்தா சிறப்பு போலீஸ்படை வங்கதேசத்தை சேர்ந்த ஜாகித் ஹுசைன் என்ற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியை நேற்று கைது செய்துள்ளது. கொல்கத்தாவின் சிட்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்த தீவிரவாதி வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

வங்கதேசத்தின் மிர்பூர் பகுதியை சேர்ந்த ஹுசைன், இந்தியாவில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனாகும். வங்கதேசத்தில் இருந்து, வெடிமருந்து, கள்ள நோட்டு போன்றவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்வது ஹுசைனுக்கு ஒதுக்கப்பட்ட வேலை.
புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில், 2010ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த குண்டு வெடிப்பில் இவனுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில், 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர், பலர், கை, கால்களை இழந்து படுகாயமடைந்தனர். ஜாகித் ஹுசைன் இன்று கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளான்.












Click it and Unblock the Notifications