'ஹோம் ஒர்க்' செய்யாததற்காக 6 வயது சிறுவனை இரும்பு 'ஸ்கேலால்' அடித்த ஆசிரியை...!
காஸியாபாத்: உ.பி. மாநிலம் காஸியாபாத் பகுதியில் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததற்காக 6 வயது மாணவனை அவனது வகுப்புஆசிரியை இரும்பு ஸ்கேலால் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். அந்த ஆசிரியையை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த ஆசிரியையின் பெயர் ஜோஷ்னா நிகாம். இவர் காஸியாபாத், விஜய் நகரில் உள்ள கிருஷ்ணா பப்ளிக் பள்ளியில் கடந்த 8 மாதமாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வகுப்பில் பயிலும் 6 வயது மாணவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்து விட்டதற்காக கையில் இருந்த இரும்பு ஸ்கேலால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் மாணவனின் முதுகு, தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக் கட்டும் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த சிறுவன் தனது தாயாரிடம் அழுபடியே நடந்ததைக் கூறவே பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜோஷ்னாவைக் கைது செய்தனர்.
அவர் மீது ஐபிசி 323 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில் எனது மகன் வந்து சொன்னதும் அதிர்ச்சி அடைந்த நான் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியையிடம் இதுகுறித்துக் கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததால் அடித்தேன். மீண்டும் அதேபோல நடந்தால் நானும் மறுபடியும் அடிப்பேன் என்றார் என்று கூறினார்.
இதற்கிடையே, ஆசிரியை ஜோஷ்னா தனது தவறை உணர்ந்துள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கூறுகையில், நான் செய்த தவறை உணர்ந்து விட்டேன். நான் செய்தது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் நான் இரும்பு ஸ்கேலால் அவனை அடிக்கவில்லை. சாதாரண குச்சியால்தான் அடித்தேன். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications