ஜெ. மீதான பரிசுப் பொருள் வழக்கு: பிப். 5ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருட்கள் வழக்கின் இறுதி விசாரணை வரும் 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
1996ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி அளவில் பரிசுப் பொருட்களை பெற்றது குறித்து சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மிகவும் தாமதப்படுத்தியதால் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு சிபிஐ உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சி. நாகப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 5ம் தேதி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடக்க உள்ளது.
இதே அமர்வு தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications