காதலன் சொன்னதால் பாலத்தில் இருந்து கீழே குதித்த காதலி காயம்
டெல்லி: காதலன் மீதுள்ள காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து குதித்து காலை உடைத்துக் கொண்டுள்ளார் டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் காசிபூர் பகுதியில் செல்போன் கடையில் பணிபுரியும் வாசிம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனிதா டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு இடம் பெயர்ந்தார். இதனால் அனிதாவை மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார் வாசிம். அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த அனிதாவின் தோழி அவருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.
அதோடு திருமண நிச்சயதார்த்த படத்தை செல்போனிலும் அனுப்பி வைத்தார். அதை பார்த்தும் ஆத்திரம் அடைந்த அனிதா டெல்லிக்கு அவசரமாக வந்தார்.
நேற்று மாலை காதலன் வாசிமை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாசிம் தன் மீது காதல் இருப்பது உண்மையானால் பாலத்தில் இருந்து குதிக்க முடியுமா? என்று கேட்டார்.
தனது காதல் உண்மையானது என்பதை நிரூபணம் செய்ய அனிதா பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிமை கைது செய்தனர். காதலை நிரூபிக்க இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்தது கிழக்கு டெல்லி மதுவிகார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications