ஹெல்ப்... ஹெல்ப்... ஓடும் காரில் கதறிய பெண்... விரைந்து சென்று காப்பாற்றிய போலீசாருக்கு ‘ஷாக்’!
டெல்லியில் ஓடும் காரில் உதவி கேட்டு இளம்பெண் நாடகமாடி, போலீசாரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் காப்பாற்றும்படி கதறிக் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்த டெல்லி போலீசார் விரைந்து சென்று அந்தக் காரைப் பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். காரணம் மது போதையில் நண்பர்களுடம் சென்ற அப்பெண் விளையாட்டுக்காக அவ்வாறு செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு, கார் ஒன்றில் இளம் பெண் ஒருவர் உதவி கேட்டு கதறுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தக் காரின் பதிவெண்ணை அனைத்து செக்போஸ்டுக்கும் போலீசார் கொடுத்த போலீசார், விரைந்து செயல்பட்டனர்.
அதன்பலனாக சாலையொன்றில் அந்தக் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்தக் காரில் இரண்டு இளைஞர்களுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மூவரையும் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, அந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் நண்பர்கள் தானாம். மூவரும் மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, வீடு திரும்பும் வழியில் விளையாட்டாக அப்பெண் இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் மூவரையும் விடுவித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
ஆனபோதும், ஆபத்தில் இருந்ததாகக் கருதி இளம்பெண் ஒருவரை விரைந்து செயல்பட்டு காப்பாற்றியதற்காக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அழைத்து உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications