பயங்கரவாதத்தை மட்டும் கைவிடுங்க போதும்.. ஐ.நா.வில் பாக். பிரதமருக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி!!
நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்வைத்த 4 அம்ச திட்டங்கள் எதுவும் தேவையில்லை; பயங்கரவாதத்தை மட்டும் அந்நாடு கைவிட்டால் போதும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் மற்றும் சியாச்சினில் இருந்து ராணுவத்தை விலக்குவது உள்ளிட்ட 4 அம்ச திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே போதும்; இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு இந்தியா தரப்பில் உடனே பதிலடி கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினாலே போதும்... பிரச்சனை தீர்ந்துவிடும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஐ.நா. சபையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுமார் 25 நிமிடங்கள் நேற்று உரையாற்றினார். அந்த உரையின் சுருக்கம்:
70 ஆண்டுகளில் 3வது உலகப் போர் நடைபெறுவதை ஐக்கிய நாடுகள் சபை வெற்றிகரமாக தடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைதி பாதுகாப்புப் பணியில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அதிகமானது. ஐ.நா. அமைதிப் படையில் 8 ஆயிரம் இந்தியர்கள் தற்போது இடம்பெற்றுள்ளனர்.
ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவலிக்கும். ஐ.நா.வின் 70வது ஆண்டை முன்னிட்டு அமைதிப் பணியில் உயிரிழந்த 161 இந்தியர் உட்பட 3,300 அமைதிப் படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்தோடும் தொடர்புடையது அல்ல. தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். மனிதாபிமானத்துக்கு எதிரான தீவிரவாத செயலில் ஈடுபடுகிறவனுக்கு எந்த ஒரு மதமும் கிடையாது.
2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் சுதந்திரமாக நடமாட முடிகிறது. அண்மையில் கூட எல்லை தாண்டி ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் அனைத்துமே இந்தியாவை நிலைகுலையச் செய்யும் முயற்சியே. அத்துடன் சட்டவிரோதமாக பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதை நியாயப்படுத்துகிற நடவடிக்கை.
The @UN at 70: A Time for Action. Read the full text of EAM's speech in Hindi https://t.co/th2K3UxMnS and English https://t.co/kxzzMiibVe
— Vikas Swarup (@MEAIndia) October 1, 2015 இந்தியா இப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் 4 அம்ச திட்டத்தை முன்வைத்து பேசியிருந்தார். எங்களைப் பொறுத்தவரை 4 அம்ச திட்டங்கள் எல்லாம் வேண்டாம்.. தீவிரவாதத்தைக் கைவிடுதல் என்ற ஒற்றை அம்சமே போதுமானது.. அதன் பின்னர் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.
1945ஆம் ஆண்டு புவிசார் அரசியலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 2015ஆம் ஆண்டுக்கும் எப்படி பொருத்தமானதாக இருக்க முடியும்? ஆப்பிரிக்காவுக்கும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும் நிரந்த இடம் வழங்காமல் இருப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
ஆகையால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications