நேரில் சென்றுதான் ஜெ.வுக்கு சிகிச்சைக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்பது கிடையாது: நட்டா
சென்னை அப்போலோவிற்கு நேரில் சென்றுதான் ஜெயலலிதாவுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பது கிடையாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லி: சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னைக்கு சென்றுதான் உதவ வேண்டும் என்பது இல்லை என்றும் டெல்லியில் இருந்தபடியே உதவி செய்து வருகிறோம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நட்டா பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்னர், தமிழக அரசு சார்பிலும், அப்போலோ மருத்துவமனை சார்பிலும், மாநில முதல்வர் என்ற அடிப்படையில் சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை கேட்டுக் கொண்டன.
இதனைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை அப்போலோவிற்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உதவி செய்வதோடு, கண்காணித்தும் வருகிறோம்.
முதல்வர் இயல்பு நிலைக்கு திரும்ப ஜெயலலிதாவிற்கு அனைத்துவிதமான உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்து வருகிறோம். மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தொற்று பரவக் கூடாது என்பதற்காகத்தான் மருத்துவர்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய மருத்துவ விளக்கம். இதற்கு அடுத்த கட்டமாக ஜெயலலிதா பேசத் தொடங்கிய உடன் நானும் பிரதமரும் மோடியும் நேரில் சென்று பார்த்து வருவோம்.
நானும், பிரதமர் மோடியும் நேரில் சென்று ஜெயலலிதாவைப் பார்த்துத்தான் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்று இல்லை. டெல்லியில் இருந்தே அனைத்து மருத்துவ உதவிகளும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன என்று நட்டா தெரிவித்துள்ளார்.