தேர்தல் ஆணையத்தில் இன்று புதிய கட்சி பெயரை பதிவு செய்கிறது வாசன் "காங்கிரஸ்"!
டெல்லி: புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வரும் 28-ந் தேதி திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். அத்துடன் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக இன்று வாசனின் ஆதரவாளர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த 3-ந்தேதி சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி, புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். புதிய கட்சிக்கான பெயர் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் தெரிவிப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். வரும் 28-ந் தேதி இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பொதுகூட்டத்துக்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கட்சியின் பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்வதற்கான வேலை மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது. கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிந்தால்தான், திருச்சி பொதுக்கூட்டத்தில் அதை அறிவிக்க முடியும் என்பதால், அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
புதிய கட்சிக்கும், பழைய பெயரான தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே வைக்க வேண்டும் என்பது ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் விருப்பம். இதனால் இந்தப் பெயரையே மீண்டும் பதிவு செய்வதற்காக, முன்னாள் எம்.பி. கார்வேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் ஆகியோர் நேற்று டெல்லி சென்று, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். இன்று வாசன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புதிய கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான மனு ஒன்றையும் அளிக்க உள்ளனர்.
இதன் பின்னரே வாசன் கட்சியின் பெயர் என்ன என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications