கோவா: காங்கிரஸில் பிளவு- 7 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவல்? ராகுல் வாங்கிய சத்தியம் வீண்?
பனாஜி: கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவா காங்கிரஸ் கட்சியின் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் 7 பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறினர். பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகளில் மாஜி காங்கிரஸ் தலைகள் இணைந்தனர்.

இதனால் கோவாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. கோவா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 11 எம்.எல்.ஏக்களைத் தக்க வைத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 11 எம்.எல்.ஏக்களிடம் சத்தியம் கூட வாங்கினார்.
ஆனால் இந்த சத்தியமும் காற்றில் பறக்கும் நிலைமை உருவாகிவிட்டது. கோவா காங்கிரஸில் சலசலப்புகள் எழத் தொடங்கின. அக்கட்சி மேலிடம் கூட்டிய கூட்டத்தை எம்.எல்.ஏக்களை புறக்கணித்தனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் காங்கிரஸின் 11 எம்.எல்.ஏக்களில் 7 பேர் பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளனர் என்கின்றன பனாஜி தகவல்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது. கோவா காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், இப்படியான தகவல்கள் திட்டமிட்ட வதந்திகள் என்கிறார்.
கோவாவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்தவாரம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சி தாவினால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications