கோவாவில் ‘தேங்காய் மற்றும் முந்திரித் திருவிழா’... மே 21ம் தேதி தொடக்கம்
பனாஜி: முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான கோவாவில் இம்மாதம் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ‘தேங்காய் மற்றும் முந்திரி திருவிழா' நடைபெற உள்ளது.
அம்மாநிலத்தில் அதிகமாக விளையும் இவ்விரண்டு பொருட்களின் சிறப்பை மேலும் எடுத்துரைக்கும் வகையில் இத்திருவிழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக கோவா மாநில சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
வாழ்வாதாரமான தேங்காயும், முந்திரியும்....
கோவா மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது தேங்காயும், முந்திரியும். இவைகள் இரண்டையும் திட மற்றும் திரவ உணவுகளில் சேர்த்து வியாபாரம் செய்யப் படுகிறது.
தேங்காய் மற்றும் முந்திரி திருவிழா...
எனவே, கோவாவில் விளையும் தேங்காய் மற்றும் முந்திரியின் சிறப்புகளை அனைவரும் அறியும் வகையில் இம்மாதம் 21ம் தேதி முதல் 25ம் தேதி பனாஜியில் உள்ள கேம்பல் பகுதியில் கோவா சுற்றுலாத்துறை சார்பில் ‘தேங்காய் மற்றும் முந்திரி' திருவிழாவை நடத்தப் பட உள்ளது.
உலக அரங்கில்...
இத்திருவிழா நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கோவாவில் தேங்காய் மற்றும் முந்திரியின் பயன்பாட்டைக் குறித்து மக்கள் அறிந்து கொள்ள இயலும்.
மற்ற சிறப்பம்சங்கள்...
மேலும், இத்திருவிழாவின் ஒரு அங்கமாக சமையல் நிகழ்ச்சிகள், ஃபெனியை பயன் படுத்தி காக்டெயில் தயாரிப்பது, இசை நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.
விளையாட்டுப் போட்டிகள்...
பொழுதுபோக்கு அம்சமாக தேங்காயை உடைக்கும் மற்றும் உருட்டும் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
முதன்முறையாக....
பொதுவாக தேங்காய் மற்றும் முந்திரி அதிகமாக விளையும் சமயங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது வழக்கம் தான். ஆனபோதும், சுற்றுலாத்துறை சார்பில் முதன்முறையாக இத்தகைய திருவிழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மரம் ஏறும் பயிற்சி...
மேலும், இத்திருவிழாவில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளது' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலக மக்களின் கவனத்திற்காக...
இது தொடர்பாக கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் கூறுகையில், கோவா வாழ் மக்களுக்கு தேங்காயும், முந்திரியும் முக்கிய வாழ்வாதாரங்கள். அதனை நாங்கள் உலகம் முழுவதும் வெளிப்படுத்த விரும்புகிறோம். அதற்காகத் தான் இந்த திருவிழா. இதன் மூலம் உலகம் கோவா மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.