ஆடி மாதம் சிக்கன் பிரியாணி செய்த மனைவி... கத்தியால் குத்தி கணவர் தற்கொலை முயற்சி
பெங்களூர்: ஆடி மாதத்தில் மனைவி சிக்கன் சமைத்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் வசந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகுமார் (32). கடந்த 7ம் தேதி இவரது இளைய மகனுக்குப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆடி, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் சிலர் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். அந்தவகையில், முன்கூட்டியே பிறந்தநாள் அன்று சைவச் சாப்பாடு தான் செய்ய வேண்டும் என முரளி தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அன்று மகனுக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை அவரது மனைவி செய்ததாகத் தெரிகிறது. அதோடு, சிக்கன் பிரியாணியை சாப்பிடச் சொல்லி கணவரை வற்புறுத்தியுள்ளார் மனைவி. இதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்த முரளிகுமார் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சமையலைக்குச் சென்ற முரளி அங்கிருந்த கத்தியால் தன்னைத் தானே வயிற்றில் குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் முரளி.
அங்கு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முரளி தரப்பு விளக்கத்தையும் கேட்டறிந்த பிறகே உண்மை நிலை தெளிவாகும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.