உச்சநீதிமன்ற நீதிபதி .. பரிந்துரைப் பட்டியலில் தமது பெயரை நீக்க கோபால் சுப்ரமணியம் கோரிக்கை!
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து தமது பெயரை விலக்கிக் கொள்ளுமாறு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவிக்கு ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ரோஹின்டன் நாரிமன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நியமனக் குழு இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின், வழக்கறிஞர்களாக உள்ள இருவரது பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அவர்களது பின்னணி குறித்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி, குறிப்புகளுடன் புதிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் கோபால் சுப்ரமணியம் பெயரை மத்திய அரசு நிராகரித்து உச்ச நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்தே உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து தமது பெயரை திரும்பப் பெறுமாறு கோபால் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபால் சுப்ரமணியம் பின்னணி
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபால் சுப்ரமணியம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரித்த வர்மா குழு விசாரணையில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
ஒடிசாவில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை குறித்த வாத்வா விசாரணைக் குழுவிலும் இடம்பெற்றவர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வழக்கில் நீதிமன்ற உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் வழக்கு, நாடாளுமன்ற தாக்குதல் வழக்குகளிலும் ஆஜராகி உள்ளார். சொலிசிட்டர் ஜெனரல், இந்திய பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, குஜராத்தில் நரேந்திர மோடி அரசு மீது புதிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அதன் விளைவாக, அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.