மகாராஷ்டிரா பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் முகமாக திகழ்ந்த கோபிநாத் முண்டே!
டெல்லி: சாலை விபத்தி சிக்கி உயிரிழந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த மூத்த தலைவராக திகழ்ந்தவர்.
டெல்லி விமான நிலையம் அருகே கோபிநாத்முண்டேவின் கார் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம்அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபிநாத் முண்டேக்கு தலையிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டதால் ரத்தம் பெருமளவில் வெளியேறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மரடைப்பில் மரணம்
மேலும் சிகிச்சையின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் உயிர் பிரிந்ததாகவும், உடன் இருந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா தலைவர்
மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே, முதன் முறையாக மோடி அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.
பிற்படுத்தப்பட்டோர் முகம்
1949ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் இதர பிற்படுத்தப்பட்ட வஞ்சரி சமூகத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோபிநாத் முண்டே.
5முறை எம்.எல்.ஏ
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முண்டே. 1980-85; 1990-2009 ஆகிய காலங்களில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் முண்டே.
எதிர்க்கட்சித் தலைவர்
மகாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக 1992-95ஆம் ஆண்டு காலத்தில் பணியாற்றினார்.
துணை முதல்வராக
பின்னர் 1995-1999ஆம் ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் முண்டே பணியாற்றினார்.
லோக்சபா துணைத் தலைவர்
கடந்த லோக்சபாவில் பாஜக துணைத் தலைவராக இருந்தவர் கோபிநாத் முண்டே.
பிரமோத்மகாஜனின் மைத்துனர்
இவர் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மைத்துனர். மாநிலத்தில் சரத் பவாருக்கு கடும் போட்டியாக இருந்தவர் கோபிநாத் முண்டே.
நாளை இறுதிச்சடங்கு
அமைச்சராக பதவியேற்ற ஒருவாரத்திற்குள் மரணத்தை கோபிநாத் முண்டே தழுவியுள்ளார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.