பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்வது பெரும் சவால்... புதிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா
டெல்லி: ரயில்வே துறையில் பல சவால்கள் காத்திருப்பதாகவும், ஆனபோதும் பாதுகாப்பான ரயில் பயணங்களை நிச்சயமாக்குவதே தனது முக்கியப் பணி எனத் தெரிவித்துள்ளார் ரயில்வே துறையின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள சதானந்த கவுடா.
நேற்று டெல்லியில் இருந்து கோரக்பூர் செல்லும் கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே அதே டிராக்கில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில், சுமார் 40 பேர் பலியானார்கள், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று மாலை இந்தியாவின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார், மற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் ரயில்வே துறை அமைச்சராக சதானந்த கவுடா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சதானந்த கவுடா. அப்போது அவர் கூறியதாவது :-
ரயில்வே துறையின் முன் பல்வேறு சவால்கள் உள்ளன.அதை ஆராய்ந்துவிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு,வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சதானந்த கவுடா தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக விரைவில் பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோல், தனக்கு ஒரு பத்து நாள் அவகாசம் தந்தால் இது தொடர்பாக மக்கள் முன் விளக்கமாகக் கூறுவேன் எனக் கூறிய சதானந்தா, புல்லட் ரயில் குறித்தான கேள்விக்கு, அது ஏற்கனவே பிரதமரின் தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications