ஓரணியில் திரண்டது இந்தியா.. மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு.. அனைத்துக் கட்சிகளும் முடிவு
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அழைப்புவிடுத்தது. காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் சார்பில் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில், பல்வேறு தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டதோடு, தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கமும் அளித்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினருமே, இந்திய ராணுவத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, இந்த அவசர சூழலில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முடிவுக்கும் துணை நிற்பதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications