காங்கிரஸ் அடங்கினால் எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யத் தயார்.. வெங்கையநாயுடு வைக்கும் "செக்"
டெல்லி : நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைத்தால் 25 எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்யத் தயார் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையநாயுடு தெரிவித்துள்ளார்.
ஐ..பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடி பயண ஆவணங்கள் பெற உதவிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, மற்றும் வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையை முடக்கி வருகின்றனர்.

இதையடுத்து கடந்த திங்கட் கிழமை காங்கிரசைச் சேர்ந்த 25 எம்.பி.க்களை 5 நாட்கள் சஸ்பென்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் வெங்கைய நாயுடு பேசிய போது எதிர்க்கட்சிகளான இடதுசாரி சமாஜ்வாதி, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்ப பெறவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோஷம் இடுவது, கூச்சல் குழுப்பம் ஏற்படுத்துவது பிரச்னைக்கு தீர்வாகாது என்றும், விவாதத்துக்கு வருமாறும் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய வெங்கைய நாயுடு, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தருவதாக சபாநாயகரை சந்தித்து உறுதியளித்தால் இடை நீக்கத்தை ரத்து செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால் இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications