"சுவிஸ் வங்கியில்" அக்கவுண்ட் வைத்திருந்தால் சொல்லனுமாம்.. அரசு ஊழியர்களுக்கு வந்த சோதனை!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வெளிநாட்டு வங்கிகளில் தாங்கள் வைத்துள்ள வைப்புத்தொகை குறித்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று லோக்பால் சட்ட புதிய விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை கடந்த ஜூலை மாதம் பிறப்பித்தது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அவர்களது கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்கள், வங்கி கணக்கில் உள்ள இருப்பு விவரம் ஆகியவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதால் பாதிப்பு ஏற்படும் என்று சில மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கவலையை தெரிவித்தனர். ஆனாலும் மத்திய அரசு இந்த விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று தொடர்ந்து கூறிவருகிறது.
இப்போது இந்த சட்டத்தில் புதிய விதிகளையும் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையை தனியாக தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் சமீபத்திய கணக்குப்படி 3 பிரிவுகளிலும் 26 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications