"வரைமுறை இல்லை".. மதரஸாவின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. அசாம் முதல்வர் 'ஓபன் டாக்'
குவாஹாட்டி: அசாமில் எந்த வரைமுறையும் இல்லாமல் மதரஸாக்கள் செயல்படுவதாகவும், எனவே அவற்றின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாமில் தொடர்ந்து மதரஸாக்கள் குறிவைக்கப்பட்டு இடிக்கப்பட்டு வரும் சூழலில், முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் குழந்தைகள் கல்வி கற்கும் இடங்களான மதரஸாக்களை இடிப்பது இஸ்லாமியர்கள் மீதான நேரடியான தாக்குதல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒரே பிரச்சனை.. மும்பை ஐகோர்ட்டை நாடிய விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா.. அதிரடி உத்தரவு-என்னாச்சு?
பகிரங்க குற்றச்சாட்டு
அசாமில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாகவே மதரஸாக்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரஸாக்கள் செயல்படுவதாகவும், இஸ்லாமிய குழந்தைகளை அவை தீவிரவாத பாதையில் வழிநடத்துவதாகவும் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு மதரஸாக்கள் இடிக்கப்படுகின்றன. இதுவரை 15-க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் அங்கு இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பகையை வளர்க்க..
இந்நிலையில், குவாஹாட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது: அசாமில் மதரஸாக்கள் இருப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மக்கள் மத்தியில் பகையை வளர்ப்பதற்காகவும், பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
மதரஸாக்களின் பொதுக்கல்வி
ஆனால், உண்மையில் பாஜகவின் நோக்கம் அதுவல்ல. இஸ்லாமியர்கள் தவறான பாதையில் அழைத்து செல்லப்படுவதை தடுப்பதே எங்கள் நோக்கம். மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களையும் அரசு இடிக்கப் போவதில்லை. முறையான உரிமம் பெறாத, தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குகிற மதராக்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன. மற்ற மதரஸாக்கள் வழக்கம் போல இயங்கும். ஆனால், அவற்றில் மற்ற பள்ளிகளை போல பொதுவான கல்வியை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எண்ணிக்கையை குறைக்க முடிவு
அசாமில் எந்த வரைமுறையும் இன்றி இத்தனை காலங்களாக மதரஸாக்கள் இயங்கி வந்துள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியப்போக்கால் இவை கண்டுகொள்ளப்படவில்லை. வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் சில விஷயங்களில் தலையிட அவர்களுக்கு (காங்கிரஸ்) துணிச்சல் கிடையாது. ஆனால், பாஜக அப்படி அல்ல. நாட்டின் பாதுகாப்புதான் நமக்கு முதன்மையானது. அதன்படி, முதல்கட்டமாக அசாமில் மதரஸாக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யும் முறையின் கீழ் மதரஸாக்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.