நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி நில மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பிளான்....!
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் எழுந்துள்ள சிக்கலிலிருந்து தப்பி அதை எப்படியும் நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு வெறியாக உள்ளது. இதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மசோதாவை நிறைவேற்ற அது திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 27-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் ஆனது. மார்ச் 20-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைந்தது. அந்த முதல் பகுதி கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் இந்த மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று கூறி எதிர்க் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

லோக்சபாவில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு நிலம் கையகப்படுத்தும் மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால் ராஜ்யசபாவில் மத்திய அரசு மைனாரிட்டிதான். எதிர்க்கட்சிகளுக்கே அதிக பலம் என்பதால் அங்கு மத்திய அரசின் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.
இந்த நிலையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதியாக இருந்த நிலையில், அது தொடர்பான அவசர சட்டத்தை கடந்த 3-ந் தேதி மத்திய அரசு மீண்டும் பிறப்பித்தது. அரசியல் சட்டத்தின் 123(2)(ஏ) பிரிவின்படி குடியரசுத் தலைவர் இந்த அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இந்த நிலையில் ஒரு மாத விடுமுறைக்கு பின், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மே மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும். இதேபோல் ராஜ்யசபா, வருகிற 23-ந் தேதி கூடி மே 13-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் நாளான இன்றே அவசர சட்டம் தொடர்பான நிலம் கையகப்படுத்தும் புதிய மசோதாவை (நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்துதலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை திருத்த மசோதா) மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.
இன்று சபை கூடியதும் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மற்றும் இரு முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அது முடிந்ததும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மசோதாவை தாக்கல் செய்வார்.












Click it and Unblock the Notifications