மோடியின் வாரணாசிக்கு ஒரு எட்டு வந்து போவாரா ஒபாமா?
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கு அவரை குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைக்க மத்திய அரசு முயன்று வருகிறதாம். இதுதொடர்பாக அமெரிக்கத் தரப்புடன் இந்திய தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் இந்தியா வருகிறார் ஒபாமா. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வை உலகம் முழுக்க பேச வைக்கும் வகையில் மத்திய அரசு படு வேகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒபாமாவின் இந்திய வருகையின்போது அவரை மோடியின் வாரணாசி தொகுதிக்கும் அழைத்துச் செல்வதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளதாம். இந்த ஆர்வத்தை அமெரிக்கத் தரப்புக்கும் தெரிவித்துள்ளனராம். அமெரிக்க அரசும் கூட ஆர்வமாகவே இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஒபாமா வாரணாசி வந்து செல்ல நேரம்தான் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு குறித்த அச்சமும் அமெரிக்க அதிகாரிகளிடம் உள்ளதாம்.
மோடியும், கூட ஒபாமாவை வாரணாசிக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வமாக உள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை டெல்லியோடு நிற்கக் கூடாது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறாராம் மோடி.
இதையடுத்து ஒபாமாவின் வாரணாசி பயணம் குறித்த சாத்தியக் கூறுகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
ஒபாமாவின் டெல்லி வருகையின்போது அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கிறார். முகர்ஜி, ஒபாமாவுக்கு சிறப்பு விருந்து தருகிறார்.
ஒபாமாவை வாரணாசிக்கு அழைத்துச் செல்வதில் அமெரிக்க அதிகாரிகளிடையே ஒரு முக்கியத் தயக்கம் உள்ளதாக தெரிகிறது. வாரணாசியில் உள்ள விமான நிலையம் மிகச் சிறிய ரன்வேயைக் கொண்டது. அமெரிக்க அதிபருக்கான பிரத்யேகமான ஏர்போர்ஸ் ஒன் போன்ற பிரமாண்ட விமானம் இறங்க அது போதுமானது அல்ல என்பதே அந்த பெரிய தயக்கத்திற்குக் காரணம் என்கிறார்கள். மேலும், வாரணாசி மிகவும் குறுகலான, கூட்ட நெரிசல் மிக்க நகரம். எனவே பாதுகாப்பு குறித்த கவலையும் அமெரிக்க அதிகாரிகளுக்கு உள்ளதாம்.
பொறுத்திருந்து பார்க்கலாம்.. காசிக்குப் போவாரா ஒபாமா என்பதை!












Click it and Unblock the Notifications