7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்: முரளிமனோகர் ஜோஷி, கல்யாண் சிங் நியமனம்?
டெல்லி: தேசிய ஜனநாயக முன்னணி அரசு 7 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. இதையடுத்து அவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தையடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் உத்தரவை ஏற்று உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், நாகலாந்து மாநில ஆளுநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கி சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாக நேரிட்டதால் மேற்கு வங்கம், கோவா மாநில கவர்னர்களும் பதவியில் இருந்து விலகினார்கள்.
இதனால் இந்த 5 மாநிலங்களிலும் ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இதற்கிடையே கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், திரிபுரா ஆளுநர் தேவானந்த் கன்வர் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த இடங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கல்யாண்சிங், முரளி மனோகர் ஜோஷி
இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங். ஓ.ராஜகோபால் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவிற்கு ராஜகோபால்
புதிய கவர்னர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஓ.ராஜகோபால் கர்நாடகா மாநில கவர்னராக நியமனம் செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இவர்.

சசிதரூரிடம் தோல்வி
இவர் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு சசிதரூரிடம் தோல்வி அடைந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர் ரயில்வே, ராணுவம், பாராளுமன்ற விவகாரம், சட்டம்-நீதி உள்பட முக்கிய இலாகாக்களில் பதவி வகித்த அனுபவம் பெற்றவர்.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு
7 மாநில ஆளுநர்களின் பெயர் பட்டியல் நேற்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று புதிய ஆளுநர்களின் நியமனத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய கவர்னர்கள் தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.












Click it and Unblock the Notifications