பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி.விலை.. மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை
டெல்லி: ஜிஸ்டிக்கு பிறகு பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சில பொருட்களில் விலை உயர்ந்தும், சில பொருட்களின் விலை குறைந்தும் உள்ளன. ஆனால் கடைகளில் ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு பிரிண்ட் செய்யப்பட்ட பழைய எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியார்களிடம் கூறுகையில், பேக் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களில் எம்ஆர்பி விலையைத் திருத்தி ஸ்டிக்கர் ஒட்டவேண்டியது கட்டாயம். அவற்றை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறை கண்டுபிடிக்கபட்டால் ரூ.25,000, 2 முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50,000 எனவும் 3-ம் முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஜிஎஸ்டியில் நுகர்வோர் பிரச்சினைகளை தீர்க்க, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உதவி எண்கள் 60 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 14 எண்கள் வரி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்க அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 700 புகார்கள் வந்துள்ளன. புதிய எம்ஆர்பி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விற்கப்படாத பொருட்களைச் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.