மொத்த வேட்பாளர்கள் 1,621.. கல்லூரி செல்லாமல் 1,124 பேராம்.. குஜராத் தேர்தலுக்கு நடுவே மேட்டர் லீக்
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1,124 பேர் கல்லூரி பக்கம் செல்லாதவர்கள் என்பது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதி என 2 கட்டங்களாக 182 சட்டபை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட உள்ளன.
நாளை மறுநாளான டிசம்பர் 1ல் முதற்கட்டமாக மொத்தம் 89 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ல் தேர்தல் நடைபெற உள்ளது.

களத்தில் 1621 வேட்பாளர்கள்
குஜராத்தில் தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி உள்ளது. பிற கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு இருந்தாலும் கூட தேர்தலில் போட்டி என்பது இந்த 3 கட்சிகளுக்கு இடையே தான் உள்ளது. இந்நிலையில் தான் முதற்கட்டமாக நாளை மறுநாள் ஓட்டுப்பதிவாக உள்ள 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கான தேர்தலில் 833 வேட்பாளர்கள் என மொத்தம் 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கல்லூரி பக்கம் செல்லாத 1,124 பேர்
இந்நிலையில் தான் குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல்வேறு விஷயங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், குற்ற வழக்குகள், கல்வி விபரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் குஜராத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 42 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 997 வேட்பாளர்கள் 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். 449 பேர் மட்டுமே பட்டப்படிப்பை முடித்துள்ளனர். மேலும் மேலும் 85 பேர் எழுத, படிக்க தெரியும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தமுள்ள 1,621 வேட்பாளர்களில் 1,124 பேர் கல்லூரி பக்கம் செல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குற்ற பின்னணி வேட்பாளர்கள் அதிகம்
மேலும் மொத்த வேட்பாளர்களில் 330 பேர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இதில் இதில் 167 பேர் முதற்கட்ட தேர்தலிலும், 163 பேர் 2ம் கட்ட தேர்தலிலும் போட்டியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் குற்ற வழக்குகளில் சிக்கிய 238 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை என்பது அதிகரித்து 300யை கடந்துள்ளது.

456 பேர் கோடீஸ்வரர்கள்
இதுதவிர குஜராத் தேர்தலில் மொத்தம் 456 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜகவில் 154 கோடீஸ்வரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியில் 142 கோடீஸ்வரர் வேட்பாளர்களும், ஆம்ஆத்மியில் 68 கோடீஸ்வர வேட்பாளர்களும் உள்ளனர். இதன்மூலம் குஜராத் தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.2.56 கோடியாக உள்ளது என ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications