குஜராத்தில் படேல் சமூகத்தினர் மீது தடியடி... பரவிய கலவரத்தில் உள்துறை அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய படேல் சமூகத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பட்டேல் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

படேல் சமூகத்தினர் குஜராத் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். மேலும் அந்த சமூகம் ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக இடங்களுக்காக மற்ற சாதியினருடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹர்திக் படேல் என்ற 21 வயது இளைஞரின் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாநில முதல்வர் ஆனந்திபென், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று அகமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாபெரும் மாநாடு மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதன் முடிவில் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஹர்திக் படேல் 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.
ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வாங்கப்படவில்லை. எனவே அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் அந்த மாநாட்டு பந்தலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆமதாபாத், சூரத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜனி படேல் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், தீ வைத்தனர்.
கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மேக் ஷானா பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடியதாக ஹர்திக் படேல் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் கலவரம் பரவி வருகிறது. இதனையடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் ஆனந்திபென் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications