லாக்கப் மரணம்: சர்ச்சைக்குரிய குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை
ஜாம்நகர்: 30 ஆண்டுகளுக்கு முந்தைய லாக்கப் மரண வழக்கில் சர்ச்சைக்குரிய குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாம்நகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், 2002 கோத்ரா கலவரத்துக்கு முதல்வராக இருந்த மோடிதான் காரணம்; இந்துக்கள் கோபத்தில் இருக்கின்றனர்; அவர்களது வன்முறையை தடுக்க வேண்டாம் என முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசினார் என பெரும் குற்றச்சாட்டை வீசி பரபரப்பை கிளப்பியவர்.

ஆனால் சஞ்சீவ் பட்டின் இந்த குற்றச்சாட்டை நம்பகமானது இல்லை என கூறி விசாரணை அமைப்புகள் அனைத்தும் நிராகரித்துவிட்டன. இதனிடையே 2011-ம் ஆண்டு துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார் சஞ்சீவ் பட்.
2012 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடியை எதிர்த்து மணிநகர் தொகுதியில் சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதாவை போட்டியிட வைத்தார். இதன் பின்ன 2015-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்தே சஞ்சீவ் பட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 1989-ம் ஆண்டு ஜாம்நகரில் பணியாற்றிய போது மதவன்முறைகளில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை சஞ்சீவ் பட் கைது செய்து சிறையில் அடைத்தார்.
அவர்களில் ஒருவர் விடுதலைக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமே சஞ்சீவ் பட்தான் என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை ஜாம்நகர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் 11 கூடுதல் சாட்சிகளை விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சஞ்சீவ் பட் மீதான ஜாம்நகர் லாக்கப் மரண வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications