ஒரே ஒரு ஜாதிக்காக.. முக்கிய விதியையே உதறிய பாஜக.. மிரட்டும் கோலி சமூகம்.. அரண்டு நிற்கும் குஜராத்!
காந்திநகர்: குஜராத்தில் ஒரே ஒரு ஜாதியின் வாக்கு வங்கிக்காக தனது முக்கிய தேர்தல் விதியையே தூக்கி எறிய பாஜக துணிந்திருப்பது தான் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குஜராத் அரியணையில் யார் அமரப்போகிறார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் 'கோலி' என்ற ஒற்றை ஜாதிக்காக, 'ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு' என்ற தனது கொள்கையே பாஜக தளர்த்திவிட்டிருக்கிறது.
எதிர்வரும் குஜராத் தேர்தல் தங்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ள காரணத்தாலேயே, பாஜகவினர் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜகவை மிரட்டும் குஜராத் தேர்தல்..
இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் தேர்தல் நெருங்கி வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதாலும் இந்த எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே காணப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் கோலோச்சி வரும் பாஜக, இந்த முறையும் எளிதில் அங்கு வென்றுவிடலாம் என்றே நினைத்து வந்தது. ஆனால், எதிர்பார்க்காமல் நடந்த சில விஷயங்களால் குஜராத் தேர்தல் களம் பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

பாஜக vs ஆம் ஆத்மி..
குஜராத்தில் தனது பிரதான எதிரி காங்கிரஸ் தானே என நினைத்து அலட்சியமாக வலம் வந்த பாஜகவுக்கு, ஆம் ஆத்மி இப்படியொரு சவாலை ஏற்படுத்தும் என யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. ஆம் ஆத்மிக்கு நாளுக்கு நாள் குஜராத் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது பாஜகவின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. பாஜகவுக்கு போட்டியாக இந்துத்துவா அரசியலையும், ஜாதி அரசியலையும் ஆம் ஆத்மி கையில் எடுத்திருப்பதும், கேஜ்ரிவாலின் டெல்லி மாடல் பிரச்சாரமும் குஜராத் மக்களை ஆம் ஆத்மி பக்கம் சரியச் செய்துள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, மோர்பி பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது ஆளும் பாஜக மீது குஜராத் மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக vs காங்கிரஸ் என இருந்த குஜராத் தேர்தல் களம் தற்போது பாஜக vs ஆம் ஆத்மி என மாறியுள்ளது.

மிரட்டிய கோலி சமூகம்..
தனது இரும்புக் கோட்டையான குஜராத்தில் ஆம் ஆத்மி இப்படியொரு விஸ்வரூபம் எடுக்கும் என நினைத்து பார்க்காத பாஜக, சற்று கலக்கத்தில் தான் இருக்கிறது. இதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாகவே 'ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்டு' என்ற கொள்கையை மிகவும் கண்டிப்புடன் பாஜக பின்பற்றி வந்தது. எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் இந்தக் கொள்கையை பாஜக விட்டுக் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில், குஜராத்தில் கோலி சமூகத்தை சேர்ந்த பர்ஷோத்தம் சோலங்கி என்பவருக்கு பாவ் நகர் தொகுதியில் பாஜக சீட் கொடுத்தது. அவர் அந்தத் தொகுதியில் 5 முறை எல்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது தம்பி ஹைரா சோலங்கிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இது, அவர்கள் சார்ந்த கோலி ஜாதியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

பணிந்து போன பாஜக..
குஜராத்தில் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சமூகமாக கோலி ஜாதி உள்ளது. சுமார் 32 தொகுதிளில் பெரும்பான்மையாக உள்ள கோலி சமூகத்தை பகைத்துக் கொண்டால், குஜராத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பை இழப்பது உறுதி. இதனிடையே, கோலி சமூக வாக்குகளை குறிவைத்து ஆம் ஆத்மியும் காய் நகர்த்தி வந்தது. இந்த சூழலில், ஹைரா சோலங்கிக்கு சீட் கொடுக்கவில்லை என்றால், கோலி சமூகத்தினரின் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு சென்றுவிடும் என பாஜகவுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது. இந்த தகவல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சென்றது. இதனால் வேறு வழியில்லாமல் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த கட்சி விதியை தளர்த்தி, ஹைரா சோலங்கிக்கும் குஜராத் தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications