பாஜகவை தனியாக கதறவிட்டு.. குஜராத்தில் சொல்லியடித்த ஜிக்னேஷ் மேவானி.. வட்கம் தொகுதியில் மாஸ் வெற்றி!
காந்திநகர்: குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் இளம் அரசியல் தலைவராக, தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடி வந்தவர்தான் ஜிக்னேஷ் மேவானி. உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய 'உனா பேரணியை' 2016ல் நடத்தி காட்டினார்.
இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அங்கு தலித் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ள இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல்.. 32 ஆண்டுகளாக மணிநகரில் மாறாத டிரென்ட்.. தமிழர்களின் ஆதரவு யாருக்கு?
பின்னணி
கடந்த 2017 சட்டசபை தேர்தலில் குஜராத்தில் வட்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 2017ல் நடந்த இந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக காங்கிரஸ் நிறுத்தவில்லை. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் இவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. சுயேட்சையாக நின்றும் பாஜகவிற்கு எதிராக தனி ஆளாக வென்றார். பல்வேறு தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், போராட்ட இயக்கங்கள் இவருக்கு ஆதரவு கொடுத்தன. இதனால் அந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றார்.
குஜராத்
இவர் எம்எல்ஏ ஆன நிலையில் பல்வேறு விஷயங்களில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பாஜகவை குஜராத்தில் மிக கடுமையாக எதிர்த்து வந்தார். ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். காங்கிரசில் முக்கிய தலைவராக உருவாகி இருக்கும் இவர் 40 வயது மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் 2008ம் ஆண்டில் இருந்து தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போது இவர் நிறைய போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்தில் இருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது பட ஆரம்பித்தது.
போராட்டம்
குஜராத்தில் பசு இறைச்சி சாப்பிட்டதாக அடிக்கடி சிலர் கொல்லப்படும் சம்பவம் நடந்தேறும். அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். உனாவில் பசு வதை பெயரில் நடந்த மனித கொலைக்கு எதிராக 20,000 தலித் மக்களை கூட்டி பெரிய போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை பெரிய பேரணியாக மாற்றி உனாவில் கொடி ஏற்ற முடிவு செய்தார். இவர்தான் போராட்ட கொடியை ஏற்றுவார் என்று எல்லோரும் நினைத்த போது ரோஹித் வெமுலாவின் அம்மாவை கூப்பிட்டு கொடி ஏற்ற வைத்தார்.
குஜராத் தோல்வி
இந்த நிகழ்விற்கு பின் அவர் இந்தியா முழுக்க பேசப்பட்டார். இதன்பின் தான் அவர் குஜராத்தின் முக்கிய தலைவர் ஆனார். இந்த நிலையில் குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி இன்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜிக்னேஷ் மேவானி 65177 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் மணிபாய் 61684 பெற்றார். இதையடுத்து 3493 வாக்குகள் வித்தியாசத்தில் ஜிக்னேஷ் மேவானி வெற்றி .