குஜராத் தேர்தல்: மோடி ஸ்டேடியம் பெயரை மாற்றுவோம்.. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்
அகமதாபாத்: குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில வழி பள்ளிகள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை, நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றுவோம் என பல அறிவிப்புகளை அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார்.
குஜராத் தேர்தல்: நரேந்திர மோடி ஸ்டேடியம் பெயரை மாற்றுவோம்.. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்
182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்!
வியூகம் வகுக்கும் காங்கிரஸ்
பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இந்த முறை ஆட்சியை பிடித்து கால் நூற்றாண்டு காலத்திற்கு ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணியில் முழு வீச்சில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியீடு
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் உள்பட குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டனர்.
நரேந்திர மோடியின் பெயர் மாற்றப்படும்
*குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பெயரை மாற்றி சர்தார் படேல் ஸ்டேடியம் என பெயர் வைக்கப்படும். * குஜராத்திகளுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விதவை பெண்கள், வயதான பெண்மணிகள், தனியாக வாழும் பெண்ணுக்கு மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
பெண்களுக்கு இலவச கல்வி
* மாநிலம் முழுவதும் அரசு சார்பில் 3 ஆயிரம் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் திறக்கப்படும். * * முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்.
* ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதல் 300 யூனிட்கள் வரை இலவசம் மின்சாரம் வழங்கப்படும்.
* வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.
ஜனதா மெடிக்கல் ஸ்டோர்கள்
* பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
* ஜனதா மெடிக்கல் ஸ்டோர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
* கொரோனா வைரஸ் பதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
* ரூ. 500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும். என்பன போன்ற பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ஆட்சி அமைத்ததும் நடவடிக்கை தான்
இவ்வாறு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அசோக் கெலாட், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விடும் என்றார்.
அசோக் கெலாட் பேட்டி
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், "எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் வாக்குறுதியாக தேர்தல் அறிக்கை உள்ளது. நாங்களும் தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகளும் மக்களும் கூட தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெற வேண்டும் என்று மக்களிடம் கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
125 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
இதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்படும். தற்போது ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரின், தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெற வேண்டும் என்று மக்களிடம் கேட்டு அறிக்கையை தயாரித்துள்ளோம். குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.