மோடியுடன் மோதிய குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் மாற்றம்: ராஜஸ்தான் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு
அகமதாபாத்: குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ஆளுநரான மார்கரெட் ஆல்வா குஜராத் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து உத்தர பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத் மற்றம் நாகாலாந்து ஆளுநர் அஷ்வனி குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மேலும் கர்நாடகா மற்றும் திரிபுரா ஆளுநர்களான ஹெச்.ஆர். பரத்வாஜ், தேவானந்த் கொன்வார் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்தது.
அவர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் முன்பு நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை குஜராத் ஆளுநரான கமலா பெனிவால் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். குஜராத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்கும் வரை ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா அந்த மாநிலத்தையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
இது தவிர மிசோரம் மாநில ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் நாகாலாந்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருக்கையில் லோக்ஆயுக்தாவாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை கமலா பெனிவால் நியமித்தார். மாநில அரசிடம் கேட்காமல் அவர் லோக்ஆயுக்தா நீதிபதியை நியமித்ததால் மோடி மற்றும் கமலா பெனிவாலுக்கு இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.