கோத்ரா ரயில் எரிப்பு.. கலவரத்தை கட்டுப்படுத்தாத மோடிக்கு குஜராத் ஹைகோர்ட் கண்டனம்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அஹமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த அப்போது முதல்வராக இருந்த மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மதக் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் அப்போது குஜராத்தில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் நானாவதி கமிஷனை நியமித்தது.

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதித்தது. எனினும் வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளிகள் 63 பேர் தப்பிவிட்டதாக புகார் எழுந்தது.

11 பேருக்கு தண்டனை குறைந்தது
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குளறுபடி
மேலும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது ரயில்வேத் துறை சார்பில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஓடும் ரயிலை தீ வைத்து கொளுத்தும் அளவிற்கு பாதுகாப்பு குளறுபடி எப்படி ஏற்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மோடி மீது விமர்சனம்
இதே போன்று அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த கரசேவகர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications