திருமண தகுதியை மறைத்ததாக மோடி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..
அகமதாபாத் : தேர்தலின் போது, திருமணத் தகுதியை மறைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனுக்களில் தனது திருமண விவரத்தைக் குறிப்பிடாமல், வதோதரா மக்களவைத் தேர்தல் வேட்பு மனுவில் தனது மனைவி பெயர் யசோதா பென் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மோடி தனது முந்தைய வேட்பு மனுக்களில் திருமணமானவர் என்ற உண்மையை மறைத்ததாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதே குற்றச்சாட்டை மையமாக வைத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிஷாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் நகரில் உள்ள கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக விசாரித்த மாஜிஸ்திரேட், மனுதாரரின் புகார் உண்மைதான். எனினும், இச்சம்பவம் நடைபெற்ற ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கு தாமதமாக தொடரப்பட்டுள்ளதால் இது விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நிஷாந்த் வர்மா. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இவ்வழக்கை இவ்வளவு தாமதமாக தொடர்ந்தது ஏன்? என்பதற்கான காரணத்தை குறிப்பிட மனுதாரர் தவறி விட்டார். எனவே, இவ்வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்வதாக குஜராத் உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி வி.எம்.சஹாய் அறிவித்தார்.