"ரொம்ப புத்திசாலினு நினைப்பா.." மோர்பி பால விபத்து! குஜராத் அரசை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்
காந்திநகர்: குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தின் விசாரணையில், குஜராத் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் குஜராத்தில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலத்தில் திடீர் விபத்து ஏற்பட்டது. நாட்டில் நடந்த மோசமான பால விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
150 ஆண்டுகள் பழமையான இந்த மோர்பி தொங்கு பால விபத்தில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையும் நடந்து வருகிறது. இதனிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், பலர் கொல்லப்பட்டு உள்ள இந்த விவகாரத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுத் தப்பிக்கப் பார்க்க வேண்டாம் என்று மோர்பி நகராட்சியைச் சாடியுள்ளது. மேலும், சில முக்கிய கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

தப்பிக்க வேண்டாம்
மேலும், 150 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்கு அந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து குஜராத் ஐகோர்ட் கூறுகையில், "அரசு அமைப்பான மோர்பி முனிசிபாலிட்டி இந்த விஷயத்தில் தவறிவிட்டது.. இதனால் 135 பேர் பலியாகி உள்ளனர். நோட்டீஸ் அனுப்பியும் கூட விசாரணைக்கு நகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவர்கள் புத்திசாலித்தனமாக இதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்களா?

டெண்டர் இல்லை
பாலம் மீண்டும் திறக்கப்படும் அதன் தரத்தைச் சரிபார்க்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எதாவது இருக்கிறதா? இதற்கு யார் பொறுப்பு என்ற விவகாரங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என்பதையும் அரசு விளக்க வேண்டும். டெண்டர் எதுவும் விடாமலேயே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அவர்கள் பணிகளை ஒதுக்கியதாகவே தெரிகிறது.

சரமாரி கேள்வி
பாலம் பழுதுபார்க்கும் பணிக்கு ஏன் டெண்டர் விடுக்கவில்லை? ஏன் இந்த நிறுவனத்தையும் அழைக்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைப் பார்த்தீர்களா.. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் வெறும் 1.5 பக்கம் தான் இருக்கிறது. டெண்டர் கூட விடுக்காமல் எப்படிக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணியை வழங்கினார்கள்" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விளக்கமளிக்க 6 துறைகளுக்கு உத்தரவிட்டனர்.

யார் பொறுப்பு
மேலும், அவர்கள், "இந்த ஒப்பந்தம் தொங்கு பாலத்தை இயக்குவது, பராமரிப்பது, நிர்வகிப்பது பற்றியது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஜூன் 15, 2017இல் முடிந்துவிட்டது. எனவே, அதன் பிறகு பாலத்தின் தரத்தைச் சான்றளிக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது. 2017 இல் காலம் முடிந்த பிறகு, மோர்பி பாலத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்பாக புதிய டெண்டரை விட மாநகராட்சியும் கலெக்டரும் எடுத்த நடவடிக்கை என்ன" என்று கேட்டார்.

நடவடிக்கை இல்லை
இந்த சம்பவம் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். இருப்பினும், அந்நிறுவனத்தின் டாப் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல முன்கூட்டியே பாலத்தைத் திறக்க முடிவெடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், பராமரிப்பு பணிகளின் போது பாலத்தின் கேபிள் மாற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விளக்கம்
இந்த விபத்திற்குப் பின்னர் குஜராத் அரசு துரிதமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அம்மாநில அரசு நீதிமன்றத்தில் அளித்து உள்ளது. விபத்தில் உயிரிழந்தோருக்கு 4 லட்சமும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும், இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஜராத் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications