குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ விலகல்… சீட் தராததால் அதிருப்தி
அகமதாபாத்: நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக நடந்து வரும் நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர் விலகியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பாஜகவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு, குஜராத்தின் படான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரதன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்பேஷ் தகோர். மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

குஜராத் சத்திரிய தகோர் சேனா என்ற அமைப்பை நடத்தி வந்த எம்.எல்.ஏ. அல்பேஷ், நாடாளுமன்ற தேர்தலில் படான் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் முன்னாள் எம்.பி. ஜக்திஷ் தகோரை வேட்பாளராக கட்சி அறிவித்தது. இதனால் மாநில கட்சித்தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று அவர், காங்கிரசில் இருந்து விலகினார். முன்னதாக அல்பேஷின் சத்திரிய தகோர் சேனாவும், காங்கிரசுடனான உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, குஜ்ஜார் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய அந்த அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா மற்றும் அவரது மகன் விஜய் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications