திரைப்படத்துறைக்கு உகந்த மாநிலம் விருது குஜராத்துக்காம்...
டெல்லி: திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கிறது... அதுவும் இம்முறை முதல் முறையாக உருவாக்கப்பட்ட திரைப்படத்துறைக்கு உகந்த சிறந்த மாநில விருது குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுதான் சர்ச்சையாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாக்களின் தாய்வீடாக தமிழகம் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்... தென்னிந்திய சினிமாக்களின் பெரும்பாலான படங்கள் தமிழகத்து ஸ்டுடியோக்களில்தான் படமாக்கப்பட்டன... இங்கேயே திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நடைபெற்றன...

காலத்தின் போக்கில் ஸ்டுடியோக்கள் மால்கள் உள்ளிட்ட பலவகைகளில் உருமாற்றம் பெற்றுவிட்டன... அப்போதும் கூட எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியை தமிழக அரசே உருவாக்கியது. அதேபோல் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதேபோல் இந்தி சினிமா உலகின் தாய்வீடாக மும்பை திகழ்கிறது...
இன்றளவும் ஆண்டுக்கு சுமார் 200 தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. இசைஞானி இளையராஜா 1,000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படி எண்ணற்ற சிறப்புகளையும் மேதைகளையும் கொண்டது தமிழ் சினிமா.
ஆனால் 1932-ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை மொத்தமே 1,030 குஜராத்தி மொழி படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்; அந்த மாநில அரசும் திரைப்படதுறைக்காக ஏராளமான சலுகைகளை அள்ளி வீசினாலும் இந்தி மொழி படங்களே அங்கு கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. குஜராத்தி மொழி சினிமா என்பதே அடையாளமற்ற ஒன்றாகத்தான் இருக்கிறது.
குஜராத்தில் படப்பிடிப்புகளை நடத்துவதற்கான சிறந்த இடங்களாக வேண்டுமானால் எந்த மாநிலத்திலும் இல்லாத சில இடங்கள் குஜராத்தில் இருக்கின்றன. பாலைவனமாகவும் இல்லாமல் கடலாகவும் இல்லாமல் பல நூறு கிலோ மீட்டர் விரிந்து கிடக்கும் சதுப்பு நிலமான ரான் ஆப் கட்ச்; இந்தியாவிலேயே சிங்கங்கள் வாழும் குஜராத்தின் கிர் காடுகள் போன்றவற்றை விரல்விட்டு எண்ணி சொல்லலாம்.
இந் நிலையில் தான் குஜராத்துக்குதான் திரைப்படத்துறைக்கு உகந்த மாநில விருது கொடுப்பதாக அறிவித்திருக்கிறது குஜராத்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதற்காகத்தான் இந்த விருதுக்கு குஜராத் தேர்வு செய்யப்பட்டிருப்பது என்பது அப்பட்டமாக தெரிகிற உண்மை!












Click it and Unblock the Notifications