குஜராத் சட்டசபை தேர்தல்: டிச.9,14-ல் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு; டிச.18-ல் வாக்கு எண்ணிக்கை
குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று பகல் 1 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
பொதுவாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுடன் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் இம்முறை இமாச்சல பிரதேச தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீட்டால்தான் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்தார்.

சட்டசபைக்கு 2 கட்ட தேர்தல்
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி கூறியதாவது: குஜராத் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 22-ந் தேதி முடிவடைகிறது. குஜராத்தின் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

டிச.18-ல் வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 9, 14 ஆகிய 2 நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதியும் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்படும்.

மகளிர் மட்டும் வாக்கு சாவடிகள்
இம்மாநிலத்தில் மொத்தம் 50,128 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 102 அனைத்து மகளிர் வாக்குச் சாவடியாகும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர்.

செலவினங்கள் கண்காணிப்பு
குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் பறக்கும்படை மூலம் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு ஏ.கே. ஜோதி கூறினார்.












Click it and Unblock the Notifications