கொரோனா அச்சுறுத்தல்... +2 பொதுத்தேர்வை ரத்து செய்த குஜராத் அரசு
காந்திநகர்: கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாகக் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்கப்படு வருகிறது.

அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும்தான் மிக முக்கியம் என்பதால் அதைச் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் இதனால் இந்த ஆண்டிற்கான சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு மாநில அரசுகளும் வரவேற்றன. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தேர்வு நடத்தப்பட்டால் அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் எனச் சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாகக் குஜராத் அரசும் தற்போது அறிவித்துள்ளது. இத்தகவலைக் குஜராத் கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா உறுதி செய்துள்ளார்.
மத்திய அரசு சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியான பிறகு, முதல் மாநிலமாக குஜராத் தனது மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. முன்னதாக குஜராத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல Indian School Certificate Examinations எனப்படும் சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications