துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது: ஜம்மு காஷ்மீர் முதல்வர் சுதந்திர தின உரை
ஸ்ரீநகர்: துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்ஷீ ஸ்டேடியத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், நமக்கு வேறு எங்குமே தீர்வு கிடைக்காது. தவறு ஜம்மு காஷ்மீர் மக்கள் மீதோ, இந்தியா மீதோ இல்லை. பல ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் மீதே தவறு. வாஜ்பாயியின் காலத்தில் அரைகுறையாக இருந்த முயற்சிகள் பிரதமர் மோடியின் காலத்தில் நிறைவேறும் என்று நம்புவோமாக.
துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது என்றார்.
சுதந்திர தினமான இன்று ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.