42 நாள் பரோல் கொடுங்க.. பலாத்கார சாமியார் குர்மீத் மனு... காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
ரோதக்: பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம் ரகீம், விவசாய பணிக்காக 42 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பரோலுக்காக இவர் விடுத்த கோரிக்கையை பார்த்து சிறை அதிகாரிகள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். எனினும் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.
அரியானாவைச் சேர்ந்தவர் சாமியார் தான் குர்மீத் ராம். இவர் அரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பினை ஏற்படுத்தி மக்களிடம் வசீகரமான கருத்துக்களை கூறி கவர்ந்தார். இதன் மூலம் வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற அவர், பல லட்சம் ஆதரவாளர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
குர்மீத்தை தலைவராக ஏற்றுக்கொண்டு பெரிய அளவில் தொண்டர்கள் கூட்டம் அரியானா மற்றும் ராஜஸ்தானில் உருவானது. அரசியல் சக்திகளை தீர்மானிக்கும் அளவுக்கு குர்மீத் ராம் வளர்ந்து இருந்தார். இவர் மீது 2 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இது தொடர்பான விசாரணை நடத்த போலீசார் முயன்ற போது பெரும் கலவரம் வெடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனால் சர்ச்சையில் சிக்கிய குர்மீத் ராம் ரகீமை அரியானா போலீசார் கைது செய்தனர். இவர் மீது 2 பலாத்கார வழக்குகள், பத்திரிக்கையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கு பதியப்பட்டன.
பலாத்கார வழக்குகளை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இவருக்கு கடந்த 2017ல் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள சுனாரியா சிறையில் குர்மீத் ராம் ரகீம் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பத்திரிக்கைாளர் கொலை வழக்கில் இவருக்கு இந்தாண்டு ஜனவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது குர்மீத் ராம் ரகீம், விவசாய பணிகளை கவனிக்க 42 நாட்கள் பரோல் கேட்டுள்ளார். இவரது விண்ணப்பத்தை சிர்சா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள சிறை கண்காணிப்பாளர், சிறை விதிமுறைகளை குர்மீத் ஒழுங்காக பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.