ராகுலுடன் கருத்து வேறுபாடு.... மூத்த காங். தலைவர் குருதாஸ் காமத் அரசியலுக்கு முழுக்கு
மும்பை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் குஜராத், ராஜஸ்தான் மாநில கட்சி மேலிட பொறுப்பாளருமான குருதாஸ் காமத் தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவரும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி அண்மையில் விலகுவதாகவும் தனிக்கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரான திக்விஜய்சிங், கட்சி அறிவித்த வேட்பாளர்களை பல கோடி ரூபாய்க்கு பாஜகவிடம் விற்றவர்தான் அஜித் ஜோகி எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த குருதாஸ் காமத், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மும்பை வடகிழக்கு லோக்சபா தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றவர் குருதாஸ் காமத்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இணை அமைச்சராக இருந்தவர். குருதாஸ் காமத் கடந்த 10 நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் தாம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கூறியுள்ளார்.
மும்பை பிரதேச காங்கிரஸ் தலைவராக சஞ்சய் நிருபம் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலே இம்முடிவை குருதாஸ் காமத் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications