சுனந்தாவுடன் பிரச்சனை இருந்தது: டெல்லி போலீசிடம் தெரிவித்த தரூர்
டெல்லி: சுனந்தாவுக்கும், தனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அது சரியாகிவிட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் டெல்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் அவர் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சுனந்தாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த மாத இறுதியில் போலீசாரிடம் அறிக்கை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு சுனந்தா இறந்த இரண்டாவது நாள் தரூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தை முன்னணி நாளிதழ் பெற்றுள்ளது. வாக்குமூலத்தில் தரூர் கூறியிருப்பதாவது,
ஹோட்டல்
நான் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று காலை 6.40 மணி வரை சுனந்தாவுடன் இருந்தேன். இரவில் எங்களுக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவர் அதிகாலை 2 மணிக்கு சத்தம் போட்டார். பின்னர் சமாதானம் ஆகிவிட்டார்.
தூக்கமின்மை
சுனந்தா தூக்கமின்மையால் தவித்து வந்தார். அவரால் இரவு நேரத்தில் தூங்க முடியாது. அதனால் அவர் தூங்குவதற்கு ஆல்பிராக்ஸ் மருந்தை உட்கொள்வார்.
உணவு
சுனந்தா கடந்த 2 நாட்களாக சாப்பிடவில்லை. 16ம் தேதி காளான் சூப் குடித்தார். அவருக்கு மதிய உணவை எனது கையாலேயே கொடுத்தேன். பின்னர் இளநீர் மட்டும் குடித்தார். உணவை நினைத்தாலே அவருக்கு குமட்டும் நிலை இருந்தது.
டார்லிங்
நான் படுக்கை அறைக்குள் நுழைந்து டார்லிங் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஆனால் சுனந்தா அசையவே இல்லை. அவருக்கு காய்ச்சலாக இருக்குமோ என நினைத்து நெற்றியில் கையை வைத்தபோது அவரது உடல் குளிர்ச்சியாக இருந்தது. கை விரைத்திருந்தது. உடனே நான் பிறரை அழைத்ததோடு ஹோட்டலுக்கு போன் செய்து டாக்டரை அனுப்பி வைக்குமாறு கூறினேன். ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது என்றார் தரூர்.
டாக்டர்கள்
இறக்கும் முன்பு சுனந்தாவின் உடலில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், அவர் ஆல்பிராக்ஸ் மருந்தை உட்கொள்ளவே இல்லை என்றும் மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுனந்தாவின் உடலுக்கு அருகே இரண்டு அட்டை ஆல்பிராக்ஸ் மாத்திரை கிடந்துள்ளது. அதுவும் மாத்திரை இல்லாமல் வெறும் அட்டை. அதனால் அவர் அளவுக்கு அதிகமாக ஆல்பிராக்ஸ் எடுத்ததால் இறந்திருக்கக்கூடும் என்று முதலில் கருதப்பட்டது.
காயம்
சுனந்தா உடலில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் அவரது விரலில் ஊசி போட்ட தடம் இருந்துள்ளது. கொலையை செய்தவர்கள் தெளிவாக திட்டமிட்டு செய்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலோனியம்
சுனந்தாவின் உடலில் பொலோனியம் 210 என்ற கதிர்வீச்சு தன்மை கொண்ட விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விஷம் பாமரருக்கு கிடைக்காதது.
தரூர்
தற்போது சுனந்தா பற்றி எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்காமல் இருந்து வருகிறார் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.